Publish Date: Fri, 02 Jan 2009 (13:35 IST)
Updated Date: Fri, 02 Jan 2009 (13:34 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
இதுகுறித்து ஜியோ தொலைக்காட்சிக்கு பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி அளித்துள்ள பேட்டியில், குற்றவாளிகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் உடன்படிக்கை எதுவும் பாகிஸ்தான்-இந்தியா இடையே மேற்கொள்ளப்படவில்லை.
உள்நாட்டு அமைப்புகளை மீண்டும் கட்டமைப்பதில் முனைப்பாக உள்ளோம். இத்தருணத்தில், பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் ஈடுபட்டால் அது நாட்டிற்கு (பாகிஸ்தான்) கேடு விளைவிப்பதாக அமைந்துவிடும் எனக் கூறியுள்ளார்.
மும்பை தாக்குதலில் தமது மண்ணில் உள்ள சக்திகளுக்கு தொடர்புள்ளதா என பாகிஸ்தான் சுதந்திரமான புலனாய்வை நடத்தி வருகிறது. இந்தப் புலனாய்வு இருநாடுகளின் நலனை கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குரேஷி தெரிவித்தார்.
மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானியர்கள் என லஷ்கர்-ஈ-தயீபா அமைப்பின் தளபதி ஒருவர் கூறியதாக அமெரிக்க நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி குறித்து குரேஷியிடம் அப்போது கேட்கப்பட்டது.
அதற்கு, பயங்கரவாதம் என்பது இரு நாடுகளுக்கும் பொதுவான எதிரி. அதனை ஒன்றிணைந்துதான் தோற்கடிக்க வேண்டும். அந்த வகையில் ஆக்கப்பூர்வமான கூட்டு நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எப்போதும் தயாராக உள்ளது என குரேஷி பதிலளித்தார்.
Webdunia
Publish Date: Fri, 02 Jan 2009 (13:35 IST)
Updated Date: Fri, 02 Jan 2009 (13:34 IST)