Publish Date: Thu, 01 Jan 2009 (15:38 IST)
Updated Date: Thu, 01 Jan 2009 (15:38 IST)
பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நேற்றிரவு பேசியுள்ளார்.
இந்த உரையாடலின் போது இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை என்று 3 தலைவர்களும் உறுதி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங், அதிபர் சர்தாரி ஆகியோரை தனித்தனியே தொலைபேசியில் அழைத்துப் பேசிய அதிபர் ஜார்ஜ் புஷ், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய புலனாய்வில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கோர்டன் ஜான்ட்ரோ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளின் தலைவர்களும் பதற்றத்தை விரும்பவில்லை என்றார்.
சர்தாரி புஷ்சிடம் கூறும் போது, பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதிகளுக்கு இடம் இல்லை. மற்ற நாடுகளை தாக்கும் பயங்கரவாதிகள் யாரும் இங்கு இல்லை என்று தெரிவித்ததாக கோர்டன் கூறினார்.
இதேபோல் இஸ்ரேல் பிரதமருடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய புஷ், பாலஸ்தீனம் மீதான தாக்குதலை தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக கோர்டன் தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Thu, 01 Jan 2009 (15:38 IST)
Updated Date: Thu, 01 Jan 2009 (15:38 IST)