Publish Date: Wed, 31 Dec 2008 (16:16 IST)
Updated Date: Wed, 31 Dec 2008 (15:51 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-ஈ-தயீபா தளபதி ஜகியூர் ரஹ்மான் லக்வியை இந்தியாவிடம் ஒப்படைக்கும் படி அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதால் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.
மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியுடன், லக்வி பேசிய தொலைபேசி உரையாடல் அடங்கிய ஒலிநாடாவை அமெரிக்கர்கள், பாகிஸ்தான் அரசிடம் அளித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக பாகிஸ்தானில் வெளியாகும் டான் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில், பாகிஸ்தானிடம் ஒலிநாடாவை வழங்குவதற்கு முன்பாக அமெரிக்க வல்லுனர்கள் அதனை பரிசோதித்ததாகவும், அதில் பேசியது லக்வி என்றும் உறுதி செய்து கொண்டதாக தூதரக வட்டாரத் தகவல்கள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள லக்வியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தினாலும், அவ்விவகாரத்தில் கடந்த வாரம் வரை எந்த நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தாத அமெரிக்கா, தற்போது லக்வி பேசிய ஒலிநாடாவை பாகிஸ்தானிடம் ஒப்படைத்துள்ளதுடன், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவிடம் லக்வியை ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளதாக வாஷிங்டனில் உள்ள தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், மும்பை தாக்குதலில் இந்தியர்களால் கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் கஸாப்பும், லக்வியும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Webdunia
Publish Date: Wed, 31 Dec 2008 (16:16 IST)
Updated Date: Wed, 31 Dec 2008 (15:51 IST)