Publish Date: Wed, 31 Dec 2008 (15:14 IST)
Updated Date: Wed, 31 Dec 2008 (15:12 IST)
காஸா மீது இஸ்ரேல் தொடுத்த வான் வழித் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்க எதிர்கால அதிபர் பாரக் ஒபாமா ஒரு வார்த்தைக் கூட கண்டிக்காமல் மௌனம் சாதித்து வருவது கண்டு பாலஸ்தீன அராபியர்கள் கோபமடைந்துள்ளனர்.
அவரது மௌனம் இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் கொள்கையில் எந்த வித மாற்றமும் ஏற்படாது என்பதையே எடுத்துரைப்பதாக உள்ளது என்று தொலைக்காட்சி நேர்காணலில் அராபியர்கள் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒரு நேரத்தில் ஒரு அதிபர்தான் செயல்பட முடியும் என்று ஒபாமா கூறுவதை ஏற்கமுடியாது என்று கூறும் அராபியர்கள், பொருளாதாரம் பற்றியும் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் பற்றியும் எந்த அடிப்படையில் பேசினார் என்று கேள்வி எழுப்பினர்.
அமெரிக்க அதிபர் தேர்தல்களில் பாரக் ஒபாமா வெற்றி பெற்றதில் அராபியர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவியது, ஆனால் தற்போது ஒபாமாவினாலும் பாலஸ்தீனத்தில் மாற்றங்கள் ஏற்படாது என்ற முடிவிற்கு அவர்கள் வந்து விட்டதாக ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.
டெல் அவீவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் "உண்மையான பயங்கரவாதிகள் அமெரிக்க-இஸ்ரேலிய போர் எந்திரமே" என்ற வாசகம் அடங்கிய அட்டை காண்பிக்கப்பட்டது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.
இஸ்ரேல் எதிர்ப்பாளர்களும், இஸ்ரேல் ஆதரவாளர்களும் எதிரெதிர் திசையில் நின்று கொண்டு எதிரெதிர் கோஷங்களை எழுப்பியதாக தொலைக்காட்சி செய்தி அறிக்கை ஒன்று கூறுகிறது.
மேலும் நியூயார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம்பர்க், இஸ்ரேலிய தூதரக அதிகாரி அசாஃப் ஷாரிவ் என்பவரைச் சந்தித்து இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்ததும் அராபியர்களிடையே கடும் சினத்தை கிளப்பியுள்ளது.
Webdunia
Publish Date: Wed, 31 Dec 2008 (15:14 IST)
Updated Date: Wed, 31 Dec 2008 (15:12 IST)