Publish Date: Tue, 30 Dec 2008 (17:28 IST)
Updated Date: Tue, 30 Dec 2008 (17:27 IST)
பாகிஸ்தான் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை இந்தியா குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, இதன் மூலம் போர்ப் பதற்றம் தணியும் எனக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சிக்கு (பி.டி.வி) இன்று அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்த அவர், மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியா மேற்கொள்ளும் புலனாய்வுக்கு ஒத்துழைப்பு அளிப்பதுடன், அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தியா தனது விமானப்படை ஆயத்த நிலையை கைவிடுவதுடன், படைகளையும் அதன் பழைய இருப்பிடங்களுக்கு திரும்பப் பெற வேண்டும். இதன் மூலம் இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் தணியும் என தாம் நம்புவதாகவும் குரேஷி தெரிவித்துள்ளார்.
இறுதி நிபந்தனைகள் விதிப்பதன் மூலம் அண்டை நாடுகள் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது எனக் கூறிய குரேஷி, அமைதியான சூழல், பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்றார்.
மேலும், மும்பை தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை இந்தியா பகிர்ந்து கொண்டால், அதுதொடர்பான புலனாய்வுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில் தங்களுக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை என்றும் குரேஷி அப்பேட்டியில் கூறியுள்ளார்.