Publish Date: Mon, 29 Dec 2008 (11:13 IST)
Updated Date: Mon, 29 Dec 2008 (11:13 IST)
வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை தேர்தல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தலைநகர் டாக்காவில் ஏராளமான ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 50 ஆயிரம் ராணுவ வீரர்களும், 6 லட்சம் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் மொத்தமுள்ள 300 இடங்களுக்கு இன்று நடக்கும் தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் உட்பட ஆயிரத்து 552 பேர் களத்தில் உள்ளனர்.
அந்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 8 கோடி. இதில் 33 விழுக்காடு வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். அதற்கு ஏதுவாக நாடு முழுவதும் 35 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்றைய தேர்தலில் பதிவாக்கும் வாக்குகள் வரும் 30ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த 2 ஆண்டு காலமாக அந்நாட்டில் நடந்து வந்த இடைக்கால ராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, ஜனநாயகம் மீண்டும் மலர உள்ளது.
அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி தலைமையிலான கூட்டணிக்கும், மற்றொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே இத்தேர்தலில் நேரடிப் போட்டி நடைபெறுகிறது.
Webdunia
Publish Date: Mon, 29 Dec 2008 (11:13 IST)
Updated Date: Mon, 29 Dec 2008 (11:13 IST)