மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை குறித்து விசாரிக்க, சுதந்திரமான விசாரணைக் குழு அமைப்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
பெனாசிர் பூட்டோவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஐ.நா பொதுச் செயலர் பான்-கி-மூன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், பெனாசிர் கொலை குறித்து தனி விசாரணைக்குழு விரைவில் அமைக்கப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய பான்-கி-மூனின் செய்தித்தொடர்பாளர், இன்றைய தினத்தில் ஏற்பட்ட சோகத்தை பாகிஸ்தான் அரசு, மக்களுடன் இணைந்து ஐ.நா. பொதுச் செயலரும் பகிர்ந்து கொண்டுள்ளார் என்றும், பெனாசிர் கொலை குறித்த உண்மை வெளிப்படுத்தி நீதி வழங்க தேவையான நடவடிக்கைகளை பான்-கி-மூன் மேற்கொள்வார் என்றும் கூறினார்.
தற்போது நடந்து வரும் விவாதங்களை வைத்துப் பார்க்கும் போது, பெனாசிர் கொலை விசாரிப்பதற்கான விசாரணைக்குழு விரைவில் அமைக்கப்படும் என ஐ.நா பொதுச் செயலர் நம்புவதாகவும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பெனாசிர் கொலையில் உண்மையை உலகிற்கு வெளிப்படுத்த விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என கடந்த ஏழு மாதங்களுக்கு முன் பாகிஸ்தான் அரசு ஐ.நா. சபையில் கோரிக்கை விடுத்தது.
விசாரணைக்குழு அமைப்பது குறித்து கடந்த ஜூலை மாதம், பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் மக்தூம் ஷா மஹ்மூத் குரேஷியிடம் விரிவாக விவாதித்தது குறிப்பிடத்தக்கது.