Publish Date: Tue, 23 Dec 2008 (12:07 IST)
Updated Date: Tue, 23 Dec 2008 (12:05 IST)
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், அதற்கு மறுநிமிடமே பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளதாக அந்நாட்டுத் தலைமையிடம் ராணுவத் தளபதி பர்வேஸ் கயானி தெரிவித்துள்ளார்.
அதிபர் ஆசிஃப் அலி சர்தாரியை இஸ்லாமாபாத்தில் நேற்று சந்தித்துப் பேசிய கயானி, மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலைத் தொடர்ந்து ராணுவத்தின் தயார்நிலை குறித்து விளக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக ‘தி நியூஸ் டெய்லி’ நாளிழல் செய்தியில், ராணுவத்தினர் நாட்டின் மீதான எந்தவிதத் தாக்குதலையும் சமாளிக்க தயார் நிலையில் உள்ளதாகவும், நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்ய வீரர்கள் தயாராக உள்ளதாகவும் பர்வேஸ் கயானி, அதிபர் சர்தாரியிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் விமானப்படை போர்ப் பயிற்சியில் ஈடுபட்ட ஒரு சில மணி நேரத்தில் சர்தாரியைச் சந்தித்து கயானி பேசியுள்ளது, போர் பதட்டம் அதிகரித்துள்ளதை உணர்த்துவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
இதற்கிடையில், டான் நியூஸ் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்ட செய்தியில் நேற்று பாகிஸ்தான் வந்த அமெரிக்க கூட்டுப் படைகளில் தலைவர் அட்மிரல் மைக் முல்லன் உடனான சந்திப்பின் போது, இந்தியா தாக்குதல் நடத்தினால் அதனை தடுக்கவும், பதிலடி கொடுக்கவும் பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது என தளபதி கயானி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Tue, 23 Dec 2008 (12:07 IST)
Updated Date: Tue, 23 Dec 2008 (12:05 IST)