Publish Date: Thu, 18 Dec 2008 (18:19 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
பாகிஸ்தான் மீது ராணுவ ரீதியான நடவடிக்கை எடுக்கும் எண்ணம் எதுவும் இந்தியாவுக்கு இல்லை என இஸ்லாபாத்தில் உள்ள இந்தியத் தூதர் சத்யபிரதா பால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அந்நாட்டின் டான் நாளிதழ் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், அவாமி தேசிய கட்சியின் தலைவர் வாலிகானை நேற்று இஸ்லாமாபாத்தில் சந்தித்துப் பேசிய போது சத்யபிரதா பால் இதனைத் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
அவாமி லீக் தேசிய கட்சியின் தகவல்தொடர்பு செயலர் ஷாஹித் கான் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், அமைதியான சூழலின் போது இருக்கும் இடத்திலேயே இந்தியப் படைகள் தற்போதும் நிலை கொண்டுள்ளன. இந்திய-பாக். எல்லையை நோக்கி படைகள் நகர்த்தப்படவில்லை என்று இந்தியத் தூதர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தான் மீது போர் தொடுக்கப்படும் என அதிபர் ஆசிப் அலி சர்தாரியிடம், இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் தகவல்களையும் சத்யபிரதா பால் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கடந்த 61 ஆண்டுகளில் எந்த ஒரு இந்திய அமைச்சரும், பாகிஸ்தான் அதிபர் அல்லது பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது கிடையாது என்றும், அவ்வாறு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவது மரபு அல்ல என்றும் விளக்கினார்.
Webdunia
Publish Date: Thu, 18 Dec 2008 (18:19 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)