Publish Date: Thu, 18 Dec 2008 (14:08 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
ஈராக்கிற்கு வந்திருந்த அதிபர் ஜார்ஜ் புஷ் மீது தனது காலணிகளை வீசிய தொலைக்காட்சி செய்தியாளர் முன்டஸிர் அல் சைதிக்கு, மெர்சிடிர் காரை பரிசளிக்க உள்ளதாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பஹ்ரைன் தொழிலதிபர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்ஃப் டெய்லி என்ற நாளிதழுக்கு தொழிலதிபர் குரேஷ் கான் புனீரி அளித்துள்ள பேட்டியில், கடந்த 1990ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட லிமோஸின் ரக மெர்சிடிர் காரை சைதிக்கு வழங்க விரும்புவதாகவும், அதை பாக்தாத் வரை தானே ஓட்டிச் சென்று அவரிடம் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
சைதியை ஆதரிப்பதற்கு கிடைத்த சிறிய வாய்ப்பாக இதனைத் கருதுவதாகவும், இதன் மூலம் நீங்கள் (சைதி) தனியாக இல்லை என்பதை அவருக்கு உணர்த்த விரும்புவதாகவும் புனீரி கூறியுள்ளார்.
கடந்த 13ஆம் தேதி ஈராக் சென்ற அதிபர் புஷ் அந்நாட்டு பிரதமர் நுரி அல் மாலிக்கியைச் சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாகப் பேட்டியளித்தனர். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களில் ஒருவரான அல் சைதி, தனது காலில் இருந்த 2 காலணிகளையும் சுழற்றி அவற்றை புஷ்ஷை நோக்கி வீசினார்.
இதனைச் செய்யும் போது “அதிபர் பதவியில் இருந்து விலகும் உனக்கு கிடைக்கும் முத்தம் இது” என்று சைதி கூறியது குறிப்பிடத்தக்கது.