Publish Date: Tue, 16 Dec 2008 (16:59 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் அனைத்தும் பயங்கரவாதிகள் நெருங்க முடியாத இடத்தில் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் கெர்ரியிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று பாகிஸ்தான் சென்ற ஜான் கெர்ரி, அதிபர் சர்தாரியை சந்திந்துப் பேசினார்.
அப்போது, மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் மீது தொடர்ந்து குற்றம்சாற்றி வரும் இந்தியா அதற்கான ஆதாரங்களை அளிப்பதில்லை என சர்தாரி அவரிடம் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஐ.எஸ்.ஐ அல்லது பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு இருப்பதாக தாம் நம்பவில்லை என ஜான் கெர்ரி கூறியதாக அந்நாட்டின் “தி டான்” நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எனினும், தேசச் சார்பற்றவர்கள் என கூறப்படும் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், மும்பை தாக்குதல் குறித்து இந்தியா நடத்தும் புலனாய்வுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கெர்ரி வலியுறுத்தியுள்ளார்.
லஷ்கர்-ஈ-தயீபா போன்ற பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருவதாக தெரிவித்துள்ள ஜான் கெர்ரி, பயங்கரவாதத்தை ஒழிக்கும் பணியில் பாகிஸ்தானுக்கு தமது அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்பதை புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிபர் ஒபாமாவின் சார்பாக தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
இதற்கிடையில் அந்நாட்டின் ஏ.பி.பி. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ராணுவத் தளபதி ஜெனரல் கயானியின் சிறப்பான நடவடிக்கைகளால் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னேற்றமடைந்துள்ளதாகவும், அவர் இருக்கும் வரை பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்த முடியும் என்றும் ஜான் கெர்ரி கூறியுள்ளார்.