Publish Date: Mon, 15 Dec 2008 (18:19 IST)
Updated Date: Mon, 15 Dec 2008 (18:19 IST)
தீவிரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையின் போது கைது செய்யப்படுபவர்கள் அல்லது எந்த ஒரு பாகிஸ்தானிய பிரஜையும் இந்தியா உட்பட எந்த சர்வதேச நாட்டிடமும் ஒப்படைக்க மாட்டோம் என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்றிரவு அளிக்கப்பட்ட விருந்தில் பேசிய போது இதனை தெரிவித்த சர்தாரி, தெற்காசியப் பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்ற பாகிஸ்தானின் ஆசை, பலவீனமாக கருதக் கூடாது என்றார்.
அந்நாட்டின் நியூஸ் டெய்லியில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், பிரதமர் யூசிப் ரஸா கிலானி உள்ளிட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததுடன், பாகிஸ்தானில் கைது செய்யப்படும் எந்தப் பாகிஸ்தானிய பிரஜையும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படமாட்டார்கள் என சர்தாரி தெரிவித்துள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு சபையால் தடைவிதிக்கப்பட்டுள்ள ஜமாத்-உத்-தவா அமைப்பை ஒடுக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதித்த சர்தாரி, நாட்டின் நலன் கருதியே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.
மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது குறித்து ஆணித்தரமான ஆதாரங்கள் எதையும் இந்தியா அளிக்கவில்லை எனக் குறிப்பிட்ட சர்தாரி, பயங்காரவாதத்திற்கு எதிரான போரை நாட்டின் நலன்கருதியே பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. பிற நாட்டின் வற்புறுத்தலால் அல்ல என்றார்.
Webdunia
Publish Date: Mon, 15 Dec 2008 (18:19 IST)
Updated Date: Mon, 15 Dec 2008 (18:19 IST)