Publish Date: Mon, 01 Dec 2008 (13:39 IST)
Updated Date: Mon, 01 Dec 2008 (13:38 IST)
உலகில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் பயங்கரவாதம் பொதுவான எதிரி எனக் குறிப்பிட்டுள்ள ஆஸ்ட்ரேலிய பிரதமர் கெவின் ரூட், மும்பையில் கொடூரத் தாக்குதல் நடந்துள்ள தருணத்தில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்நாட்டின் ஏபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் அரசு பொறுப்பான விதத்தில் பதிலளித்துள்ளது. இக்கடினமான தருணத்தில் புதுடெல்லியும், இஸ்லாமாபாத்தும் அமைதி காக்க வேண்டும் என்பதே எனது கருத்து என கெவின் ரூட் தெரிவித்ததுள்ளார்.
உலகில் நாகரிகமடைந்த நாடுகள், மக்களுக்கு பயங்கரவாதம் பொதுவான எதிரியாக உள்ளது. எனவே, அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள நட்பு நாடுகள், கூட்டாளிகளுடன் இணைந்து போராடுவதே நமது முக்கிய குறிக்கோள். மும்பையில் நடந்த தாக்குதல் பயங்கரவாதத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தியுள்ளது என கெவின் ரூட் கூறியுள்ளார்.
ஆஸ்ட்ரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த கேட்டி அன்ஸ்டீ (வயது 24) மும்பைத் பயங்கரவாத தாக்குதலின் போது சுடப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைத்தார். இதேபோல் அவரது நண்பர் டேவிட் கூக்கரும், பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தார்.
Webdunia
Publish Date: Mon, 01 Dec 2008 (13:39 IST)
Updated Date: Mon, 01 Dec 2008 (13:38 IST)