Publish Date: Sat, 29 Nov 2008 (19:03 IST)
Updated Date: Sat, 29 Nov 2008 (19:02 IST)
ஏடன் வளைகுடா அருகே சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்குக் கப்பலில் 25 இந்தியர்கள் உள்ளதாக மும்பையில் உள்ள கப்பல் போக்குவரத்து இயக்குனரகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆப்ரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள லிபிரியா நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான ரசாயனம் ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல் நேற்று கடத்தப்பட்டதாகவும், அதில் இருந்த 25 இந்தியர்கள் உட்பட 31 சிப்பந்திகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர் என்றார்.
இந்தோனேஷியாவின் துமாய் துறைமுகத்தில் இருந்து ஐரோப்பா நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போது ஏடன் வளைகுடா அருகே சோமாலிய கடற்கொள்ளையர்கள் அதனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பல் கடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும் இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் சர்வதேச கடல்சார் வாரியத்தின் கடத்தல் தடுப்பு தகவல் குழு ஆகியவற்றிற்கு உதவி கோரி செய்தி அனுப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.