Publish Date: Sat, 29 Nov 2008 (12:33 IST)
Updated Date: Sat, 29 Nov 2008 (12:33 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு காஷ்மீரில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-ஈ-தயீபா அமைப்பே காரணம் எனக் கருதுவதாக நியூயார்க் டைம்ஸ் இணையதளத்தில் நேற்றிரவு செய்தி வெளியாகியுள்ளது.
புலனாய்வு அமைப்பின் பெயரைக் குறிப்பிடாமல், பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக அந்த இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்த அமைப்புதான் காரணம் என உறுதியாகத் தெரியவில்லை.
ஆனால் இதுதொடர்பாக கடந்த 2 நாட்களாக சேகரித்த தகவல்களின்படி லஷ்கர்-ஈ-தயீபா அல்லது காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஈ-முகமது அமைப்பிற்கு தொடர்பிருக்கலாம் எனத் தெரிகிறது.
இதற்கிடையில், இந்திய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மும்பை நட்சத்திர விடுதிகளில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அயல்நாட்டு செல்போனைப் பயன்படுத்தியதாகவும், அவர்களுக்கு அயல்நாடுகளில் இருந்து அடிக்கடி அழைப்புகள் வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதன் காரணமாகவே மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு அயல்நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பிற்கு தொடர்புள்ளது என இந்திய அதிகாரிகள் ஆணித்தரமாக நம்புகின்றனர்.
மும்பை தாக்குதலுக்கு காரணமாகக் கூறப்படும் அமைப்புகளில் ஒன்றான லஷ்கர்-ஈ-தயீபா இதனை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.