Publish Date: Fri, 21 Nov 2008 (15:36 IST)
Updated Date: Fri, 21 Nov 2008 (15:33 IST)
சர்வதேச அளவில் கடும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் அல்-கய்டா பயங்கரவாத அமைப்பு விரைவில் ஒழிந்துவிடும் என அமெரிக்க உளவு நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக அல்-கய்டா மீது முஸ்லிம் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்து கொண்டே வந்துள்ளது. மேலும், அந்த அமைப்பினரின் வெளியில் வராத செய்திகள் மூலம் அது அழிவுப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பது தெளிவாகியுள்ளது என்று புலனாய்வுத்துறை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அல்-கய்டா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து ஆதரவை இழந்து வந்தாலும், மீதமுள்ள அதிபயங்கர தீவிரவாதிகளின் கைகளில் உயிரி ஆயுதங்கள் உள்ளிட்ட அழிவுப் பொருட்கள் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் காணப்படுவதாகவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
“2025இல் சர்வதேச போக்கும் மாறிய உலகமும்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், உலகின் ஆதிக்க சக்தி என்ற அந்தஸ்தில் இருந்த அமெரிக்காவின் நிலை மாறி, சீனா, இந்தியா போன்ற நாடுகள் அந்த இடத்தைப் பிடிக்கும் வகையில் முன்னேற்றமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கசப்பான விஷயம் என்றாலும் அல்-கய்டா அமைப்பு விரைவில் ஒழியும் என்று திடமாக கூறப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது என அமெரிக்காவில் வெளியாகும் “நியூயார்க் டைம்ஸ்” நாளிதழ் தெரிவித்துள்ளது.