Publish Date: Thu, 20 Nov 2008 (15:23 IST)
Updated Date: Thu, 20 Nov 2008 (15:23 IST)
சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்துமாறு பிரிட்டன் அரசை வலியுறுத்தி அந்நாட்டு நாடாளுமன்றம் முன்பு நடந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடந்தது.
பிரிட்டன் நாடாளுமன்றச் சதுக்கத்தின் முன்பு நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடந்த இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட ஏராளமான தமிழர்கள் பங்கேற்றனர்.
சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்துமாறு பிரிட்டன் அரசை வலியுறுத்துவது, இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு பிரிட்டன் அரசைக் கோருவது, ஈழத் தமிழர் போராட்டத்தை ஆதரிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிப்பது ஆகிய மூன்று முக்கிய விடயங்களை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான கீத் வாஸ், விரேந்திர சர்மா, சியோப் கெயின் மக்டொனா, சுசான் கிரைமர், ஆன்ட்ரூ பெலிங், ரொம் பிரேக், ஜோன் ரையன், பரிகார்டினர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.