Publish Date: Thu, 20 Nov 2008 (11:27 IST)
Updated Date: Thu, 20 Nov 2008 (11:27 IST)
வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்படாததைத் தொடர்ந்து, ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 18ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
நேற்று நடந்த இடைக்கால அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இடைக்கால அரசின் வர்த்தக ஆலோசகர் ஹொசைன் சில்லுர் ரஹ்மான், எதிர்க்கட்சிகளுடன் அரசு நடத்திய பேச்சுகளில் ஒருமித்த கருத்து எற்படாததால், முன்பு அறிவிக்கப்பட்ட தேதியிலேயே தேர்தல் நடத்தப்படும் என்றார்.
நாட்டில் மீண்டும் ஜனநாயகம் மலர சுதந்திரமான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், தேர்தல் நடத்தும் சூழல் தற்போது நிலவி வருவதால், அதனைத் தாமதப்படுத்துவது இடைக்கால அரசும், தேர்தல் ஆணையமும் நாட்டு மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும் என்றும் கலிதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியக் கட்சி மற்றும் அதன் 4 கூட்டணிக் கட்சிகளும் கூறியிருந்தன.
இதையடுத்து இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பக்ருதீன் அஹ்மது தலைமையில் நேற்று முன்தினம் அமைச்சரவை கூடியது. இதில், அனைத்து அமைச்சர்களும் பங்கேற்று எதிர்க்கட்சிகளின் எச்சரிக்கை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதித்தனர்.
இதன் பின்னர் முன்னாள் பிரதமர் காலிதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியக் கட்சி மற்றும் அதன் 4 கூட்டணிக் கட்சிகளுடன் இடைக்கால அரசின் 5 மூத்த உறுப்பினர்கள் நடத்திய பேச்சுகள் தோல்வியில் முடிந்ததாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.