Publish Date: Thu, 20 Nov 2008 (10:30 IST)
Updated Date: Thu, 20 Nov 2008 (10:30 IST)
தாய்லாந்து பிரதமர் சோம்சாய் வோங்ஸ்வட்-க்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ள ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டணி அமைப்பைச் சேர்ந்தவர்களின் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
தாய்லாந்தின் தற்போதைய பிரதமராக உள்ளவர் சோம்சாய் வோங்ஸ்வட். இவர் அந்நாட்டின் முன்னாள் பிரதமரான தாக்-ஷின் ஷினாவட்ராவின் நெருங்கிய உறவினர்.
இந்நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட தாக்-ஷின் மீண்டும் பதவிக்கு வருவதற்கு உதவிபுரியும் சோம்சாயின் நடவடிக்கைகளை கண்டித்து அவரது அலுவலகத்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டதுடன், அவரது அலுவலகத்திலேயே தங்கி வருகின்றனர்.
இதற்கிடையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பிரதமர் அலுவலகத்திற்குள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டணி அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அமோர்ன் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் காயமடைந்த மேலும் 23 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.