Publish Date: Wed, 19 Nov 2008 (12:51 IST)
Updated Date: Wed, 19 Nov 2008 (12:47 IST)
இந்தியாவில் செயல்பட்டு வரும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க், பஜ்ரங்தளம் ஆகியவை பயங்கரவாத அமைப்புகள் அல்ல என்றும், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்து வருவதற்கு தடைவிதிக்கப்படவில்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து இணையமைச்சர் மல்லோச் ப்ரவுன் இதுகுறித்து அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் பேசுகையில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க், பஜ்ரங்தளம் ஆகிய அமைப்புகளுக்கு இந்தியாவிலோ, இங்கிலாந்திலோ தடைவிதிக்கப்படவில்லை என்பதால் அவற்றை பயங்கரவாத அமைப்புகளாக கருதவில்லை.
பயங்கரவாதச் சட்டம் 2000த்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஒரு அமைப்பு ஈடுபட்டிருந்தால் மட்டுமே இங்கிலாந்தில் அந்த அமைப்பைத் தடைசெய்ய முடியும்.
எனவே, பஜ்ரங்தளம், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தடை செய்யப்படாத நிலையில், அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு இங்கிலாந்தில் நுழைய பாதுகாப்பு காரணங்களுக்காக தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பதில் எந்தவித உண்மையும் இல்லை.
மற்ற பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மட்டுமே அவர்களுக்குப் பொருந்தும் என்று அமைச்சர் மல்லோச் தெரிவித்தார்.