Publish Date: Tue, 18 Nov 2008 (04:37 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:00 IST)
இலங்கையின் வடக்குப் பகுதியான கிளாலி, முகாமாலை பகுதிகளில் சிறிலங்க ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 10 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இத்தகவலை விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக புதினம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கிளாலி, முகமாலை, கண்டல் பகுதிகள் ஊடாக திங்கட்கிழமை காலை சிறிலங்கா படையினரின் 53, 55 ஆம் பிரிவு படையணிகள் மும்முனைகளில் முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.
படையினரின் பின்தளங்களில் இருந்து செறிவான பல்குழல் வெடிகணை, எறிகணை மற்றும் கனரக போர்க்கலங்களின் செறிவான தாக்குதல்களுடன் படையினர் முன்னேறினர்.
இம்முன்நகர்வுக்கு எதிராக கடும் எதிர்த்தாக்குதலை நடத்தி படையினரை பழைய நிலைகளுக்கு விரட்டியடித்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
வடபோர்முனையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் மோதல்களில் சிறிலங்கா படையினர் தரப்பில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 145 பேர் படுகாயமடைந்துள்ளனர்.