Publish Date: Tue, 11 Nov 2008 (17:40 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:44 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா, அதிபர் புஷ்ஷின் மரியாதை நிமித்த அழைப்பை ஏற்று இன்று காலை தனது மனைவி மிச்சல் உடன் வெள்ளை மாளிகைக்கு சென்றார்.
வெள்ளை மாளிகைக்கு ஒபாமா சென்றது இதுவே முதல்முறை. ஒபாமா தம்பதியரை, புஷ்-லாரா தம்பதியர் வெள்ளை மாளிகை குடியிருப்பின் வாசலில் நின்று வரவேற்று அழைத்துச் சென்றனர். விருந்தை முடித்த பின்னர் வெள்ளை மாளிகையின் பல இடங்களையும் ஒபாமா தம்பதியர் பார்வையிட்டனர்.
இதையடுத்து ஓவல் அரங்கில் ஜார்ஜ் புஷ்ஷும், பராக் ஒபாமாவும் சுமார் 2 மணி நேரம் சந்தித்துப் பேசினர். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சி, ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவது ஆப்கானிஸ்தான் பிரச்சனை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் பதவி ஏற்ற பிறகு என்னென்ன மாறுதல் செய்ய திட்டமிட்டு இருக்கிறார் என்பது குறித்தும் தற்போதைய அதிபர் புஷ்ஷிடம் ஒபாமா எடுத்து கூறினார். இதில் புஷ்ஷின் ஒத்துழைப்பு, ஆலோசனையை வழங்கும்படியும் ஒபாமா கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.
அதிபர் தேர்தலுக்குப் பிறகு ஜார்ஜ் புஷ் பிறப்பித்த சில உத்தரவுகளை ரத்து செய்யவும் ஒபாமா திட்டமிட்டுள்ளார்.
Webdunia
Publish Date: Tue, 11 Nov 2008 (17:40 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:44 IST)