Publish Date: Mon, 10 Nov 2008 (14:35 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:44 IST)
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று நடந்த தற்கொலைத் தாக்குதல், கார் குண்டுவெடிப்பில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நகரில் பாயும் டைக்ரிஸ் ஆற்றின் கிழக்கு கரையோரப் பகுதியில் உள்ள காஸ்ரா என்ற இடத்தில் முதலில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதில் காயமடைந்தவர்களுக்கு உதவும் பணியில் காவல்துறையினரும், பொதுமக்களும் ஈடுபட்டிருந்த சமயத்தில், அப்பகுதியில் நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் இருந்த குண்டை வெடிக்கச் செய்தான்.
இதன் காரணமாக அங்கு கூடியிருந்த ஏராளமானோர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என காவல்துறை அதிகாரி அச்சம் தெரிவித்தார். இந்த இரட்டைத் தாக்குதலில் காயமடைந்த 48 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.