Publish Date: Mon, 03 Nov 2008 (12:51 IST)
Updated Date: Mon, 03 Nov 2008 (12:50 IST)
அமெரிக்காவின் 44வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (4ஆம் தேதி) அந்நாட்டில் நடக்கிறது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா வெற்றி பெற்றால், அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்ற வரலாற்றுப் பெருமையைப் அவர் பெறுவார்.
கடந்த சில மாதங்களாக உலகம் மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்நாட்டின் இரு பெரும் கட்சிகளான குடியரசு, ஜனநாயகக் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதில் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெய்ன், தனது கட்சி பலவீனமாக உள்ள பென்சில்வேனியாவில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இதேபோல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா கடந்த அதிபர் தேர்தலில் தனது கட்சி தோல்வியுற்ற புளோரிடா, வடக்கு கரோலினா ஆகிய இடங்களில் சூறாவளிப் பிரசாரம் செய்துள்ளார்.
சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்புகளின்படி, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் எனத் தெரிகிறது. பென்சில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களில் மெக்கெய்னை விட ஒபாமாவுக்கு கூடுதல் ஆதரவு காணப்படுகிறது. பெரும்பாலான தேசிய கருத்துக் கணிப்புகளின்படி, ஒபாமா மெக்கெய்னை விட 7-8 விழுக்காடு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.
அதிபர் தேர்தல் முறை: அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான நடைமுறை சற்றே வித்தியாசமானது. இத்தேர்தலில் அந்நாட்டு மக்கள் ஒபாமாவுக்கோ அல்லது மெக்கெய்னுக்கோ நேரடியாக வாக்களிக்கப் போவதில்லை.
ஏனென்றால், அந்நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு குறிப்பிட்ட மக்கட்தொகைக்கு ஒரு தேர்தல் தொகுதி உருவாக்கப்படும். இதனை எலக்டோரல் காலேஜ் என்று அழைப்பார்கள். இப்படிப்பட்ட ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று அறிவிக்கப்படும். அதன்படி, அங்கு 538 எலக்டோரல் காலேஜ்கள் உள்ளன. இதில் பெரும்பான்மை பெற (அதிபர் ஆக) 270 இடங்களில் வெற்றி பெற வேண்டும்..
அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 538 வாக்குகளில், 270 வாக்குகளைப் பெற்றவர் அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்படுவார்.
Webdunia
Publish Date: Mon, 03 Nov 2008 (12:51 IST)
Updated Date: Mon, 03 Nov 2008 (12:50 IST)