Publish Date: Fri, 31 Oct 2008 (18:59 IST)
Updated Date: Fri, 31 Oct 2008 (17:52 IST)
பாலஸ்தீன அகதிகளுக்கு உரிய புகழிடம் அளிப்பதுடன், மேற்கு ஆசியாவில் விரிவான அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தனது நிலையை, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று நடந்த விவாதத்தின் போது பேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சுக்லா, பாலஸ்தீன அகதிகள் பிரச்சனையைத் தீர்க்க, மேற்கு ஆசியாவில் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சனைக்கு விரிவான அமைதியை நிலைநிறுத்துவதே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும் என்றார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் பிரச்சனைக்கு அமைதித் தீர்வு காண உலக நாடுகளின் ஒட்டுமொத்த ஆதரவைக் கோரிய ராஜீவ் சுக்லா, பரஸ்பர அமைதி உடன்பாடு மேற்கொள்ளப்படும் வரையில், பாலஸ்தீன அகதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க ஐ.நா.வின் மீட்பு மற்றும் நிவாரணப்பணி முகமையே ஏற்றது என்று கூறிவிட முடியாது என சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், ஐ.நா.வின் மீட்பு மற்றும் நிவாரணப் பணி முகமை சந்தித்து வரும் பொருளாதாரச் சிக்கல்களை களைய சர்வதேச அளவிலான நடவடிக்கை உடனடியாக தேவை என்பதையும் சுக்லா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஜோர்டான், லெபனன், சிரியா மற்றும் பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக ஐ.நா.வின் மீட்பு மற்றும் நிவாரணப் பணி முகமையால் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக இந்தியாவின் பாராட்டுகளை அம்முகமையின் ஆணையருக்கு சுக்லா தெரிவித்துள்ளார்.