Publish Date: Wed, 22 Oct 2008 (16:29 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (16:28 IST)
யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்க படையினருக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லும் கடற்படையின் விநியோகக் கப்பலை தற்கொலைத் தாக்குதல் நடத்தி மூழ்கடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்!
வழக்கம் போல யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்க படையினருக்கு தேவையானவற்றை அளித்துவிட்டு காங்கேசன்துறை துறைமுகத்தில் நின்றுக் கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை 5.10 மணியளவில் கடற்கரும்புலிகள் இந்த தற்கொலைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தங்களுடைய தாக்குதலில் எம்.வி. நிமல்லவ என்ற முக்கிய வழங்கல் கப்பல் தீப்பிடித்து மூழ்கியதாகவும், எம்.வி. ருகுனு என்ற மற்றொரு வழங்கல் கப்பல் கடும் சேதமடைந்ததாகவும், அந்தக் கப்பலை முழ்கவிடாமல் சிறிலங்க கடற்படையினர் கரைக்கு இழுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தற்கொலைத் தாக்குதலில் கடற்புலிகளின் மகளிர் துணைத் தளபதி கடற்கரும்புலி கர்னல் இலக்கியாவுடன் லெப்டினெண்ட் கர்னல் குபேரன் வீர மரணம் அடைந்ததாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கு உணவு கொண்டு செல்வதற்காக இந்தக் கப்பல்களை பயன்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவத்தினருக்கு தேவையான ஆயுதங்களை இந்தக் கப்பல்கள் கொண்டு சென்று வந்ததாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகவலை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு இணையதளமான புதினம் வெளியிட்டுள்ளது.
இப்படிப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டது உண்மைதான் என்றும், ஆனால் அதனைத் தாங்கள் முறியடித்துவிட்டதாகவும் சிறிலங்க கடற்படை தெரிவித்துள்ளது.
தங்களது கப்பல்கள் தாக்குதலில் சேதுமடைந்ததாகவும், ஆனால் முழ்கடிக்கப்படவில்லை என்றும் சிறிலங்க கடற்படைத் தெரிவித்துள்ளது.