Publish Date: Mon, 13 Oct 2008 (16:19 IST)
Updated Date: Mon, 13 Oct 2008 (16:19 IST)
சிந்து நதியின் கிளை நதியான சீனாப் மீது இந்தியா கட்டியுள்ள பக்ளிஹார் அணையின் காரணமாக பாகிஸ்தானுக்கு கிடைக்கவேண்டிய நீரின் பங்கு குறைந்திருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி, இரு நாடுகளுக்கும் இடையிலான நதி நீர் உடன்படிக்கை மீறப்பட்டால் அது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைக் கெடுத்துவிடும் என்று எச்சரித்துள்ளார்.
சீனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள பக்ளிஹார் அணையின் காரணமாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு வரவேண்டிய நீரின் அளவு குறைந்துள்ளதென பாகிஸ்தான் குற்றம் சாற்றிவருகிறது.
இந்த நிலையில் இது குறித்து அறிக்கை அளித்துள்ள பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் பகிர்வு தொடர்பான உடன்படிக்கை மீறப்பட்டால் அது இரு நாடுகளுக்கு இடையிலான உறவைக் கெடுத்துவிடும் என்று கூறியுள்ளார்.
“தற்காலிகமான குறைந்த கால இலாபங்களுக்காக, இரு நாடுகளின் நலனை அடிப்படையாகக் கொண்ட நீண்ட கால இலக்குகளை இந்தியா இழந்துவிடாது என்று நான் நம்புகிறேன்” என்று ஜர்தாரி கூறியுள்ளார்.
“நமது நாடுகளுக்கு இடையிலான எல்லை இரு தரப்பிற்கும் பயனளிப்பதாக இருக்கவேண்டும், தொல்லையளிப்பதாக ஆகக் கூடாது” என்று கூறியுள்ள ஜர்தாரி, சிந்து நதி நீர் பகிர்வு உடன்படிக்கையை ஒருபோதும் இந்தியா மீறாது என்று வாஷிங்டனில் தனக்கு அளித்த உறுதிமொழியை பிரதமர் மன்மோகன் சிங் காப்பாற்றுவார் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Webdunia
Publish Date: Mon, 13 Oct 2008 (16:19 IST)
Updated Date: Mon, 13 Oct 2008 (16:19 IST)