Publish Date: Thu, 09 Oct 2008 (13:54 IST)
Updated Date: Thu, 09 Oct 2008 (13:54 IST)
இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டுவர வழிவகுக்கும் 123 ஒப்பந்த வரைவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கையெழுத்திட்டு சட்டமாகிவிட்ட நிலையில், அதில் அமெரிக்க அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைஸ், இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் நாளை கையெழுத்திடுகின்றனர்.
இத்தகவலை அமெரிக்க அயலுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவித்துள்ளது.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்ட 123 ஒப்பந்த வரைவிற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில், அதில் அதிபர் புஷ் நேற்று கையெழுத்திட்டார்.
இந்த நிலையில் இன்று வெளியிடப்பட்ட அந்நாட்டு அயலுறவு அமைச்சக செய்திக் குறிப்பு, நாளை (வெள்ளிக்கிழமை) வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையி்ல் நடைபெறும் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் இந்தியாவின் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்க அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைஸூம் கையெழுத்திடுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு இறுதி ஒப்புதல் கிடைத்தப் பிறகு நாடாளுமன்றத்தில் அதனை முன்வைத்து அவையின் ஒப்புதலைப் பெறுவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். ஆனால், எந்தவித முன்ன்றிவிப்பும் இன்றி ஒப்பந்தம் இறுதி செய்யப்படுகிறது.
Akshesh Savaliya
Publish Date: Thu, 09 Oct 2008 (13:54 IST)
Updated Date: Thu, 09 Oct 2008 (13:54 IST)