Publish Date: Tue, 07 Oct 2008 (15:55 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (15:55 IST)
அமெரிக்காவின் லாஸ்-ஏஞ்சல்ஸ் நகரில் வசித்த இந்தியர், கடன் சுமை காரணமாக தனது குடும்பத்தினர் அனைவரையும் சுட்டுக் கொன்றதுடன், அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து இன்று வெளியான செய்தியில், இந்தியாவைச் சேர்ந்த கார்த்திக் ராஜாராம் (45) தனது 3 மகன்கள், மனைவி, மாமியார் ஆகியோரை கடந்த ஞாயிறன்று இரவு சுட்டுக் கொன்றதுடன் தானும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சோனி பிக்சர்ஸ், ப்ரைஸ் வாட்டர் ஹவுஸ் ஆகிய நிறுவனங்களில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ள ராஜாராம் நிதி நிர்வாகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். கடந்த சில மாதங்களுக்கு முன் தனது வேலையை இழந்ததால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, கடன் சுமையை சமாளிக்க முடியாமல் குடும்பத்தினரை சுட்டுக் கொலை செய்ததாக ராஜாராம் கைப்பட எழுதியுள்ள 2 கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ராஜாராமின் மகன்களான கிருஷ்ணா(19), கணேசா(12), அர்ஜுணா(7), மனைவி சுபஸ்ரீ(39), மாமியார் இந்திரா ராமஷேசம்(69) ஆகிய ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.