Publish Date: Tue, 07 Oct 2008 (13:17 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (13:16 IST)
அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜனநாயக கட்சி வேட்பாளர் பாராக் ஒபாமாவே வரவேண்டும் என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இது பற்றி சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பராக் ஒபாமாவுக்கு 76 விழுக்காடு ஆஸ்ட்ரேலியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆளும் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் மற்றொரு அதிபர் வேட்பாளரான ஜான் மெக்கெய்னுக்கு 10 விழுக்காட்டினரே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆஸ்ட்ரேலியாவில் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 1,000 பேரில் 85 விழுக்காட்டினர் தேர்தல் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து வருவதாக கூறினர். இதில் பங்கேற்ற மக்களில் 24 விழுக்காட்டினர் அமெரிக்க தேர்தலில் மிக ஆர்வமாக இருக்கின்றனர் என்று இந்த கருத்துக் கணிப்பை நடத்திய ஏ.ஏ.பி. நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 17 நாடுகளில் 17,000 மக்களிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில், ஒபாமாவே அமெரிக்காவின் 44-வது அதிபராக வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 15 விழுக்காட்டினர் தங்களை அமெரிக்காவுக்கு எதிரானவர்கள் என்றும் 67 விழுக்காட்டினர் நடுநிலைமை வகிப்பதாகவும், 17 விழுக்காட்டினர் தாங்கள் அமெரிக்க ஆதரவாளர்கள் என்றும் கூறியுள்ளனர்.
இந்தக் கருத்துக் கணிப்பில் தீவிரவாதம், ஈராக் போர், உலக பொருளாதாரம், ஏழ்மை, மனித உரிமை, சுற்றுச்சூழல், சர்வதேச வர்த்தகம் மற்றும் அணு ஆயுத பரவல் உள்ளிட்ட பன்னாட்டு பிரச்சினைகள் பற்றி கேட்கப்பட்டது.