Publish Date: Mon, 06 Oct 2008 (13:31 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (23:19 IST)
மத்திய கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் கைப்பாவையாக இஸ்ரேல் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள ஈரான் அயலுறவு அமைச்சர் மனோசெஹ்ர் மொட்டாகி, ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் அமெரிக்காவின் நேரடித் தாக்குதலாகவே கருதப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நியூஸ் வீக் என்ற பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவையும், இஸ்ரேலையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
இஸ்ரேல் அல்லது அமெரிக்காவால் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புக்கு ஆபத்து நிகழும் என தாங்கள் நம்பவில்லை என்றாலும், ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அமெரிக்காவின் தாக்குதலாகவே எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
யுரேனியம் செறிவூட்டும் திட்டம் குறித்து அவர் பேசுகையில், ஈரான் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முற்றிலும் சட்டத்திற்கு உட்பட்டவை என்றும், இதுகுறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் பேச்சு நடத்துவதன் மூலமே தீர்வு காண முடியும் என்றும் குறிப்பிட்டார்.
எனினும், அணுசக்தி பிரச்சனை தொடர்பாக ஐரோப்பிய யூனியன்-டெஹ்ரான் இடையே ஜெனீவாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் சார்பில் வில்லியம் பர்ன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண மேற்கொள்ளப்பட்ட உண்மையான நடவடிக்கை என்றும், இதுபோன்ற நடவடிக்கைகளை அவர்கள் (அமெரிக்கா) தொடர வேண்டும் என்றும் மொட்டாகி வலியுறுத்தியுள்ளார்.
Webdunia
Publish Date: Mon, 06 Oct 2008 (13:31 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (23:19 IST)