Publish Date: Wed, 01 Oct 2008 (16:36 IST)
Updated Date: Wed, 01 Oct 2008 (16:29 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வழிவகுக்கும் 123 ஒப்பந்தத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து அமெரிக்க செனட் சபை இன்று வாக்கெடுப்பு நடத்த உள்ள நேரத்தில், இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால் அமெரிக்காவின் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக 2 திருத்தங்களை பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பாக செனட் சபை உறுப்பினர்களான பைரன் டோர்கன், ஜெஃப் பிங்காமென் (இருவரும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள்) முன்வைத்துள்ள திருத்தத்தில், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா வழங்கும் அணு பொருட்கள், தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தியா தனது அணு ஆயுதத் திறனை மேம்படுத்திக் கொள்ளாது என உறுதியளிக்கக் கோரியுள்ளனர்.
இதில் உறுப்பினர் டோர்கன் முன்வைத்துள்ள திருத்தத்தில், சட்டத்தில் இடமில்லை என்றாலும் இந்தியா அணு ஆயுதம் அல்லது அணு ஏவுகணை சோதனை நடத்தினால், அந்நாட்டுக்கு அளித்து வரும் அணு ஆயுத எரிபொருள் ஏற்றுமதி, தொழில்நுட்ப மற்றும் அதுதொடர்பான உபகரணங்களை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.
மற்றொரு உறுப்பினர் பிங்காமென் வலியுறுத்தியுள்ள திருத்தத்தில், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றிய பின்னர், ஒருவேளை இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால், அதில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், தொழில்நுட்பம் உள்ளிட்டவை அமெரிக்கா வழங்கியது அல்ல என்றும் செனட் சபைக்கு அமெரிக்க அதிபர் சான்றிதழ் அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
கடந்த 28ஆம் தேதி அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை (காங்கிரஸ்) ஒப்புதல் அளித்த நிலையில், இன்று அதே வடிவில் செனட் சபையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக செனட் பெரும்பான்மை தலைவர் ஹாரி ரீட் கூறியுள்ளார்.
இன்றைய செனட் கூட்டம் துவங்கியவுடன் இது முதல் மசோதாவாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும், அதன் மீது 60 நிமிட விவாதம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
Webdunia
Publish Date: Wed, 01 Oct 2008 (16:36 IST)
Updated Date: Wed, 01 Oct 2008 (16:29 IST)