Publish Date: Sat, 27 Sep 2008 (13:34 IST)
Updated Date: Sat, 27 Sep 2008 (13:34 IST)
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட, இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு 123 ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மீது 40 நிமிடம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்தினர்.
இதில் ஒப்பந்தத்திற்கு கடந்த காலத்தில் எதிர்ப்புத் தெரிவித்த அயலுறவு விவகாரக் குழுவின் தலைவர் ஹோவர்ட் பெர்மன், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற அனுமதியளிக்கலாம் என்றும், இதன் மூலம் அணு ஆயுத எதிர்ப்புக் குழுவில் இந்தியாவும் இணையும் என்றும் ஆதரவு தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பிரிவினரின் சார்பில் அடுத்து பேசிய ஜனநாயகக் கட்சி உறுப்பினர் எட்வர்ட் மர்கி, உறுப்பினர்களின் வாக்கெடுப்பை பதிவு (recorded) முறையில் நடத்த வேண்டும் எனக் கோரினார்.
ஆனால் அப்போது அவையில் போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தாலும், வாக்கெடுப்பை பதிவு செய்யும் இயந்திரம் சரியாக வேலை செய்யாததாலும், வாக்கெடுப்பு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
வாக்குகளை பதிவு செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் வரும் திங்களன்று அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Webdunia
Publish Date: Sat, 27 Sep 2008 (13:34 IST)
Updated Date: Sat, 27 Sep 2008 (13:34 IST)