Publish Date: Fri, 26 Sep 2008 (11:50 IST)
Updated Date: Fri, 26 Sep 2008 (11:48 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், இரு தரப்பினருக்கு திருப்தியளிக்கக் கூடிய வகையில் இருக்கும் என அதிபர் புஷ்ஷை சந்தித்துப் பேசிய பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இன்று அதிகாலை அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்தித்துப் பேசினார்.
சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது இரு தரப்புக்கும் திருப்தியளிக்கும் வகையில் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என அதிபர் புஷ்ஷிடம் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
அப்போது, அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை தமது அரசு மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மன்மோகனிடம் அதிபர் புஷ் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்புக்கு பின்னர் இரு தலைவர்களும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய புஷ், 123 ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கூடிய விரைவில் பெறப்படும் என்றும், இதற்கு தனது அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.
பின்னர் பேசிய மன்மோகன் சிங், தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், இரு தரப்புக்கும் திருப்தியளிக்கும் வகையில் நிறைவேற்றப்படும் என்று தாம் நம்புவதாக கூறினார்.
இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், அது புஷ் அரசுக்கு வரலாற்று பெருமை மிக்க சாதனையாக அமையும் என்றும், இதன் மூலம் உலகின் மிகப்பெரிய இரண்டு ஜனநாயக நாடுகளின் நட்புறவு மேலும் வலுப்படும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.