Publish Date: Thu, 25 Sep 2008 (19:39 IST)
Updated Date: Thu, 25 Sep 2008 (19:38 IST)
இலங்கையில் இனப் படுகொலையில் ஈடுபட்டுள்ள சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கண்டித்து அமெரிக்காவில் தமிழர்கள் பேரணி நடத்தினர். ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கண்டித்து நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அவைக்கு முன்பு புதன்கிழமை இனப் படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு நடத்திய இந்தக் கண்டனப் பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கா, கனடா வாழ் தமிழர்கள் பங்கேற்றனர் என்று புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
கனடாவின் டொரன்டோ, மான்றியல் நகரங்களில் இருந்து மட்டும் 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் பேருந்துகளிலும் விமானங்களிலும் வந்து கண்டனப் பேரணியில் பங்கேற்றிருந்தனர். கனடாவில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வாகன ஏற்பாடுகளை செய்திருந்தது.
பேரணியில் பங்கேற்றவர்கள் சிறிலங்கா அரசின் இனப் படுகொலையைக் கண்டிக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
கண்டனப் பேரணியின் முடிவில் நடந்த பொதுக் கூட்டத்தில் வழக்கறிஞர் வி.ருத்திர குமாரன், வழக்கறிஞர் நாதன் சிறீதரன், உசா சிறீஸ் கந்தராஜா, வனிதா இராசேந்திரம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) மு.தியாகலிங்கம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) ஆகியோர் உரையாற்றினர்.