Publish Date: Wed, 24 Sep 2008 (11:07 IST)
Updated Date: Wed, 24 Sep 2008 (11:06 IST)
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க செனட் சபையின் அயலுறவு விவகாரங்களுக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது. அணு சக்தி ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாக 19 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பதிவானது.
வாஷிங்டனில் நேற்று மாலை நடந்த செனட் குழுக் கூட்டம், நிறைவடையும் சில நிமிடங்கள் இருந்த தருணத்தில் அணு சக்தி ஒப்பந்தம் 9வது விஷயமாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விவாதத்திற்கு பின்னர் நடந்த வாக்கெடுப்பில், ஒப்பந்தத்திற்கு ஆதரவாக 19 வாக்குகள் பதிவானது. ஒப்பந்தத்திற்கு எதிராக 2 வாக்குகள் மட்டுமே பதிவானதால் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு செனட் குழு ஒப்புதல் அளித்ததுடன் அதனை அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.
இதற்கிடையில், அணு சக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்த 2 உறுப்பினர்கள் யார் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் கடந்த வாரம் இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகள் துவங்கப்பட்ட போது, கலிபோர்னியாவைச் சேர்ந்த பார்பரா பாக்ஸர் மற்றும் விஸ்கான்சினைச் சேர்ந்த ரஸ் பீன்கோல்ட் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அணுசக்தி ஒப்பந்தத்திற்கு செனட் குழு ஒப்புதல் அளித்திருப்பதை தொடர்ந்து அமெரிக்க
நாடாளுமன்றமும் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அதிபர் புஷ்ஷை, பிரதமர் மன்மோகன் சிங் நாளை (25ஆம் தேதி) சந்திக்கும் முன், அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், நேற்றிரவு ஜெர்மனியில் இருந்து நியூயார்க் சென்றடைந்தார். ஏற்கனவே நியூயார்க்கிற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியை இன்று சந்தித்துப் பேசும் பிரதமர், இரு தரப்பு உறவுகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளார்.
Webdunia
Publish Date: Wed, 24 Sep 2008 (11:07 IST)
Updated Date: Wed, 24 Sep 2008 (11:06 IST)