Publish Date: Sat, 20 Sep 2008 (15:49 IST)
Updated Date: Sat, 20 Sep 2008 (15:46 IST)
பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்த இங்கிலாந்து இளைஞர், வெடிகுண்டு தயாரிக்க இணையதளத்தில் இருந்து தகவல் திரட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது 18 வயதாகும் ஹம்மத் முன்ஷி, இங்கிலாந்திலேயே மிக இளம் வயதில் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையதளத்தில் இருந்து வெடிகுண்டுகள், வெடிக்கும் பொருட்கள், கையெறி குண்டுகள் ஆகியவற்றை தயாரிக்க உதவும் தகவல்களை பதிவிறக்கம் செய்த குற்றத்திற்காக கடந்த 2 ஆண்டுக்கு முன் லண்டன் காவல்துறையினர் முன்ஷியை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை லண்டனில் உள்ள ப்ளாக் ப்ரியர்ஸ் க்ரவுன் (Black friars crown) நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் முன்ஷி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், நீதிபதி திமோத்தி போண்டியஸ் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். இளம் குற்றவாளிகளுக்கான சீர்திருத்த மையத்தில் அவர் தனது தண்டனைக் காலத்தை கழிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிபதி தனது தீர்ப்பில், தாம் என்ன செய்கிறோம் என்பதை முன்ஷி முழுவதுமாக உணர்ந்துள்ளார் என்றும், இதுபோன்ற தகவல்களை திரட்டியது மிகப் பெரிய குற்றம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரபலமான இஸ்லாமிய அறிஞர் யக்குப் முன்ஷியின் பேரனான ஹம்மத் முன்ஷி, 2006ஆம் ஆண்டு தனது வேதியியல் தேர்வை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது காவல்துறையினர் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்த 2 சிறிய பைகளில் தற்கொலைத் தாக்குதலுக்கு உதவும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.
முன்ஷியின் கூட்டாளிகளான ஆபித்கான், சுல்தான் முஹம்மது (23 வயது) இருவரும் ஏற்கனவே சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.