Publish Date: Fri, 19 Sep 2008 (15:58 IST)
Updated Date: Fri, 19 Sep 2008 (15:55 IST)
துபாயில் குடும்பத்துடன் வசித்து வந்த கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த வாலிபர், அவரது மனைவி, குழந்தை ஆகிய 3 பேரும் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் கிரீஸ் குமார் (35). இவர் துபாயில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பெயர் ஷாபிகா (27). இவர்களது குழந்தையின் பெயர் கவுரி நந்தா (2). கிரீஸ் குமார் தனது மனைவி, குழந்தையுடன் துபாயில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், இவர்களது 3 பேரின் சடலங்களும் அங்குள்ள நீர் நிலை ஒன்றில் பிணமாக மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதில், ஷாபிகாவின் உடலும், கவுரியின் உடலும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த நிலையில் இருந்ததாகவும், ஷாபிகாவின் உடலில் தீக்காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சாவுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஹிந்தி மொழியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கிடைத்ததாகவும், கிரீஸ் குமாருக்கு சில பிரச்சினைகள் இருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், கிரீஸ்குமாரின் சகோதரி இந்த துயர நிகழ்வு பற்றி கூறுகையில், அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறியுள்ளார்.
இந்த சாவில் மர்மம் இருப்பதாகவும், இது தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Webdunia
Publish Date: Fri, 19 Sep 2008 (15:58 IST)
Updated Date: Fri, 19 Sep 2008 (15:55 IST)