Publish Date: Fri, 19 Sep 2008 (15:32 IST)
Updated Date: Fri, 19 Sep 2008 (15:31 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வழிவகுக்கும் 123 ஒப்பந்தத்திற்கு அனுமதி கோரி அதிபர் ஜார்ஜ் புஷ் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த தீர்மானத்தின் மீது, அந்நாட்டு செனட் அவையில் இன்று விவாதம் துவங்கியது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளின் கருத்துகளிலும் முரண்பாடுகள் காணப்படுவதால், இதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைப்பதில் சிறிது சிக்கல் இருக்கும் என தகவல்கள் தெரிவித்தாலும், எதிர்கட்சியான ஜனநாயக கட்சியின் செல்வாக்குப் பெற்ற உறுப்பினர் ஜான் கெர்ரி இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது சாதகமானதாகக் கருதப்படுகிறது.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த விவாதத்தில் இந்தியா அணு ஆயுத பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமா என்பது குறித்தும், ஈரானுடன் இந்தியாவுக்கு உள்ள உறவுகள் குறித்தும் பல கேள்விகளை எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், மசாசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஜனநாயக கட்சி உறுப்பினர் ஜான் கெர்ரி அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவாகப் பேசுகையில், இந்தியாவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அனுமதி மறுப்பது, உலக அரங்கில் பொறுப்பான ஜனநாயக நாட்டை தள்ளிவைப்பதற்கு ஒப்பானதாகும் என்று குறிப்பிட்டதுடன், அணு சக்தி தொழில்நுட்பத்தை கையாளுவதில் சர்வதேச விதிகளை பின்பற்றி நடப்பதுடன் சிறப்பான நிர்வாகத் தன்மையை கடைபிடித்து வரும் இந்தியாவுக்கு அனுமதி மறுக்கக் கூடாது என்றார்.
இந்தியாவுடன் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் சில சட்டரீதியான கேள்விகள் எழுந்தாலும், இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஈரான், வடகொரியாவுக்கு எதிரான அணு ஆயுத தடை நடவடிக்கைகளுக்கு மேலும் வலுசேர்க்க முடியும் என்றும் ஜான் கெர்ரி விவாதத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.
ரிச் லூகர், சக் ஹெகல், பாப் கார்கர், பார்பரா பாக்ஸர், ஜேம்ஸ் வெப், ரஷ் பெய்ன்கோல்ட், ஜோன் பர்ரஸோ ஆகிய செனட் உறுப்பினர்கள் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசினர்.
Webdunia
Publish Date: Fri, 19 Sep 2008 (15:32 IST)
Updated Date: Fri, 19 Sep 2008 (15:31 IST)