Publish Date: Thu, 18 Sep 2008 (12:37 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:29 IST)
இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை பீஜிங்கில் ஓராண்டுக்குப் பிறகு இன்று துவங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் இந்திய அதிகாரிகள் குழுவுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தலைமை தாங்குகிறார்.
வியன்னாவில் இம்மாத துவக்கத்தில் நடந்த இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு வழங்கும் பன்னாட்டு அணு சக்தி முகமையின் (NSG) சிறப்புக் கூட்டத்தில், இந்தியாவுக்கு விலக்கு அளிக்கக் கூடாது என சீனா வலியுறுத்தியதாக குற்றச்சாற்று கூறப்பட்ட நிலையில் இரு நாடுகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
எனினும் இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்த சீன அயலுறவு அமைச்சர் யாங் ஜெய்ச்சி, வியன்னா கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக சீனா செயல்படவில்லை என விளக்கினார். இந்நிலையில், இரு நாடுகள் இடையிலான எல்லைப் பங்கீட்டு பேச்சுகள் இன்று துவங்குகின்றன. சீனக் குழுவுக்கு டாய் பின்குவோ தலைமை தாங்குகிறார்.
கடந்த 2003ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்தப் பேச்சுவார்த்தையில் இதுவரை 11 சுற்றுப் பேச்சுகள் முடிந்துள்ளது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனையால் பாதிக்கப்படும் இந்திய-சீன உறவை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் இந்தப் பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Webdunia
Publish Date: Thu, 18 Sep 2008 (12:37 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:29 IST)