Publish Date: Fri, 12 Sep 2008 (15:30 IST)
Updated Date: Fri, 12 Sep 2008 (15:30 IST)
தாய்லாந்தின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற இருந்த வாக்கெடுப்பு, போதிய கோரம் இல்லாத காரணத்தால் அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில், போதிய உறுப்பினர்கள் வரவில்லை எனக் கூறப்பட்டது. எனினும், சபாநாயகர் கூட்டத்தை துவக்கினார். ஆனால் அப்போது நாடாளுமன்றத்தில் 161 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பை அடுத்த வாரம் புதன்கிழமைக்கு (17ஆம் தேதி) ஒத்திவைத்தார்.
மொத்தம் 480 உறுப்பினர்களை கொண்ட தாய்லாந்து நாடாளுமன்றத்தில், கூட்டம் நடத்த வேண்டுமென்றால், குறைந்தது 235 உறுப்பினர்கள் வருகை தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதற்காக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்ட பணத்தை பெற்றதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் சாமக் சுந்தரவேஜை அரசமைப்பு நீதிமன்றம் கடந்த வாரம் பதவி நீக்கம் செய்தது.
எனினும், அவர் அரசியலில் தொடர்ந்து நீடிக்க நீதிபதி தடைவிதிக்கவில்லை என்பதால், புதிய பிரதமர் தேர்விலும் மக்கள் சக்தி கட்சியின் சார்பில் அவர் போட்டியிடுகிறார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மற்றும் சில மக்கள் சக்தி கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்ததே போதிய கோரம் இல்லாததற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.