Publish Date: Fri, 12 Sep 2008 (13:50 IST)
Updated Date: Fri, 12 Sep 2008 (13:49 IST)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இயங்கி வரும் இந்திய தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்துவது குறித்து, பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி பர்வேஸ் கயானிக்கு முன்பே தகவல் தெரியும் என அமெரிக்க உளவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்திய தூதரகம் மீதான தாக்குதலுக்கு தேவையான நிதியுதவியை, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. வழங்கியிருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் நியூயார்க் டைமஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்த சதிச்செயல் (காபூல் தூதரக தாக்குதல்) குறித்து அவர் (பர்வேஸ் கயானி) அறிந்திருக்க மாட்டார் எனக் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாததாகவே தெரிகிறது எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த ஜூலையில் நடந்த இந்திய தூதரக தாக்குதல் சதியில் தாங்கள் (ஐ.எஸ்.ஐ) ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தாலும், அதுகுறித்து ஐ.எஸ்.ஐ கவலை கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.