Publish Date: Wed, 10 Sep 2008 (17:06 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
இந்திய தடயவியல் நிபுணரான டாக்டர் பி.சந்திரசேகரன், தடயவியல் துறைக்கும், இந்தியாவிற்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி நியூயார்க் தமிழ்ச் சங்கம் அவரை கவுரவித்துள்ளது.
மறைந்த பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட தருணத்தில், நிகழ்விடத்தில் கிடைத்த தடயங்களைக் கொண்டு அவர் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பதை அறிவித்ததும் தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
தடயவியல் துறையில் அவர் நாட்டுக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி இந்திய அரசின் 2வது உயரிய விருதாக கருதப்படும் பத்ம பூஷண் விருதையும் டாக்டர் சந்திரசேகரன் பெற்றுள்ளார்.
நியூயார்க் தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பங்கேற்று பேசிய சந்திரசேகரன், பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க பொதுமக்களின் பங்களிப்பு தேவை என்றும், அதுவும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் குறைவாக இருப்பது வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரபலங்கள், தடயவியல் துறைக்கு ஆற்றிய சேவையின் மூலம் தமிழகத்தை உலகளவில் சந்திரசேகரன் பிரபலப்படுத்தியுள்ளதாகவும், பல சிக்கலான வழக்குகளை தனது தடயவியல் திறமை மூலம் அவர் வெற்றிகரமான நிறைவு செய்துள்ளதாகவும் புகழாரம் சூட்டினர்.
இதில் பேசிய தமிழ்ச்சங்கத்தின் தலைவர் ஆல்பர்ட் செல்லதுரை, சந்திரசேகரன் எழுதிய “முதல் மனித வெடிகுண்டு” (The First Human Bomb) புத்தகம் கடந்த மாதம் இந்தியாவில் வெளியிடப்பட்டதை குறிப்பிட்டார்.