Publish Date: Mon, 08 Sep 2008 (17:02 IST)
Updated Date: Mon, 08 Sep 2008 (17:01 IST)
பாகிஸ்தான் அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிப் அலி ஜர்தாரி மிகவும் ஆபத்தானவர் எனக் குறிப்பிட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் மனைவி ஜெமீமா, அவரிடம் நாட்டை ஒப்படைத்திருப்பது பாகிஸ்தானுக்கு ஆபத்தாக முடியும் என எச்சரித்துள்ளார்.
தவறான, பைத்தியக்காரத்தனமான முடிவுகளை எடுக்கக் கூடிய ஜர்தாரிக்கு தற்போது அதிபர் பதவி கிடைத்துள்ளதால், அவருக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம், தலைமை நீதிபதி, தளபதிகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆகியோரை நியமிக்கும் அதிகாரம் கிடைத்துள்ளதால் தற்போது அவர் சர்வ வல்லமை படைத்தவராக மாறியுள்ளதாகவும் ஜெமீமா குறிப்பிட்டுள்ளார்.
சர்தாரி அதிபர் பதவிக்கு பொருத்தமற்றவர். அவர் ஒரு மோசமான பொய் பித்தலாட்ட மனிதர் என்றும், அவரிடம் நாட்டை ஒப்படைத்து இருப்பது பாகிஸ்தானுக்கு ஆபத்தாக முடியும் என்றும் கூறியுள்ளார்.
அவர் தனது மனைவியை (பெனாசிர் பூட்டோ) பயன்படுத்தி அரசியலில் நுழைந்து தந்திரமாக அதிபர் பதவிக்கு வந்து உள்ளார். அவர் பெனாசிர் பிரதமராக இருந்த காலத்தில் மிகப்பெரிய ஊழல்வாதியாக இருந்தார். “மிஸ்டர் 10%” என்ற பட்டப்பெயரும் அதனால் அவருக்கு கிடைத்ததாகவும் ஜெமீமா தெரிவித்துள்ளார்.
அப்படிப்பட்ட ஒருவரை அதிபர் பதவிக்கு வரவிட்டது மிகத்தவறு என்றும், அவரால் இந்திய துணை கண்டத்துக்கே அச்சுறுத்தல் வரும் என தாம் கருதுவதாகவும் ஜெமீமா கூறியுள்ளார்.