Publish Date: Fri, 05 Sep 2008 (12:59 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (23:11 IST)
புவி வெப்பமடைவது தொடர்ந்து தீவிரமடைந்தால் வரும் 2100ஆம் ஆண்டில் உலகளவில் கடல்மட்டம் 2.6 அடி முதல் 6.6 அடி வரை உயரும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஆனால் ஏற்கனவே இதுதொடர்பான சில ஆய்வு முடிவுகளில் குறிப்பிட்டது போல் 20 அடி முதல் 7 மீட்டர் வரை உயரும் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றுதான் என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர்.
இதுகுறித்து கொலராடோ இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்டி அண்டு அல்பைன் ரிசர்ச் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ட்டாட் பிஃபர் அளித்துள்ள தொலைபேசி பேட்டியில், பனிப் பிரதேசங்களில் உள்ள பனி மலைகள் உடைந்து கடலில் கலப்பதால் அடுத்த நூற்றாண்டில் கடல் மட்டம் உயரும் என்றாலும், பிற ஆய்வுகளில் குறிப்பிட்டது போல் 20 அடி வரை உயரும் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட முடிவுகள் என்று கூறியுள்ளார்.
எனினும், வங்கதேசம், சீனா, அமெரிக்காவின் நியூஆர்லியான்ஸ், ஆம்ஸ்டர்டாம், வெனீஸ் ஆகிய கடலோர நகரங்களில் கடல்மட்டம் உயர்வு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், இதனால் பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.