Publish Date: Thu, 04 Sep 2008 (13:33 IST)
Updated Date: Thu, 04 Sep 2008 (13:33 IST)
அணு ஆயுத ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்திய பின்னர் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால், இந்தியாவுக்கு அணு எரிபொருள் வழங்குவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளும் என அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அதிபர் புஷ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்ட இக்கடிதம் தற்போது வாஷிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க நாளிதழில் வெளியாகியுள்ளது. இது இந்திய அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கார்மார்க், இந்தியாவுடன் அமெரிக்கா மேற்கொள்ள உள்ள அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மின்சார தயாரிப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், அணு ஆயுத சோதனை உள்ளிட்ட அணு ஆயுத பரவல் தடையை மீறும் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடக் கூடாது என்பது போன்ற ஒப்புதலை இந்தியாவிடம் இருந்து பெற திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அணுஆயுத சோதனை நடத்த உரிமையுள்ளது: இதற்கிடையில், இந்தியா அணு ஆயுத சோதனை நடத்துவதை அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை காரணம் காட்டி அமெரிக்கா தடை செய்ய முடியாது என பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், அணு சக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு எப்படி அமெரிக்காவுக்கு உரிமை உள்ளதோ, அதேபோல் அணு ஆயுத சோதனை நடத்தவும் இந்தியாவிற்கு உரிமை உள்ளது என்றார்.
பிரணாப் விளக்கம்: இதற்கிடையில், இப்பிரச்சனையில் இந்தியாவிற்கு எந்தவித நெருக்கடியும் இல்லை என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கியுள்ளார்.
இதுதொதர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப், பொது கொள்கையின் அடிப்படையில் பிறநாட்டு உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிடாது என்றாலும், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி இந்தியா செயல்படும் என அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
Webdunia
Publish Date: Thu, 04 Sep 2008 (13:33 IST)
Updated Date: Thu, 04 Sep 2008 (13:33 IST)