Publish Date: Tue, 12 Aug 2008 (20:42 IST)
Updated Date: Tue, 12 Aug 2008 (20:42 IST)
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் கூட்டத்தில் அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (என்.எஸ்.ஜி) இந்தியாவிற்கான விலக்கு ஒப்பந்த வரைவிற்கு ஒப்புதல் அளித்தாலும், செப்டம்பர் 2ஆம் தேதி மீண்டும் ஒரு கூட்டம் நடத்தப்படும் என மத்திய மற்றும் தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க துணை அமைச்சர் ரிச்சர்ட் பெளச்சர் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆகஸ்ட் 21ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற எளிதான ஒப்புதல் கிடைத்துவிடும் என்றாலும், செப்டம்பர் 2ஆம் தேதி நடத்தப்படும் இரண்டாவது கூட்டத்திலேயே அந்த ஒப்புதல் இறுதி செய்யப்படும் என ரிச்சர்ட் பெளச்சர் தெரிவித்துள்ளார்.
அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவில் உள்ள பிற நாடுகளும் இந்த ஒப்பந்தத்திற்கு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும் என அமெரிக்க கேட்டுக் கொண்டதாகவும், இந்திய-அமெரிக்க இடையிலான ஒப்பந்தத்தை நிறைவேற்ற என்.எஸ்.ஜி-யில் அனுமதி கிடைத்தவுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அணு சக்தி ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்படும் என்று கடந்த வாரம் ஜப்பான் சென்ற போது செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக அந்தக் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வியன்னாவில் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில், இந்தியாவுடன் அணு சக்தி தொழில்நுட்பத்தை வணிகம் செய்வதற்கான ஒப்புதலை என்.எஸ்.ஜி-யிடம் இருந்து அமெரிக்கா பெற்று விடும் என்றும் அதன் பின்னர் அது அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கபடும் என்றும் கூறப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது இந்தியாவும், அமெரிக்காவும் செப்டம்பர் 2ஆம் தேதி என்.எஸ்.ஜி-யுடன் மீண்டும் கூட்டம் நடத்தும் என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Tue, 12 Aug 2008 (20:42 IST)
Updated Date: Tue, 12 Aug 2008 (20:42 IST)