Publish Date: Fri, 08 Aug 2008 (14:19 IST)
Updated Date: Fri, 08 Aug 2008 (14:19 IST)
இலங்கையில் முல்லைத்தீவு மருத்துவமனை வளாகத்திற்குள் சிறிலங்கப் படையினர் ஏவிய எறிகணைகள் விழுந்து வெடித்ததில் ஒரு வயதுக் குழந்தை பலியாகியுள்ளது. மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மருத்துவமனை, மருத்துவர்கள் குடியிருப்பு, ஆட்சியர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளின் மீது இன்று அதிகாலை 1.00 மணியளவில் சிறிலங்கப் படையினர் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில், மருத்துவமனையில் இருந்த ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளதாகவும், முல்லைத்தீவு மாவட்ட ஆட்சியர் இமெல்டா சுகுமார் உள்ளிட்ட 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
முன்னதாக, முல்லைத்தீவின் கரையோரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சிறிலங்கப் படையினர் நடத்தி வரும் எறிகணைத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் அச்செய்தி கூறுகிறது.