Publish Date: Thu, 07 Aug 2008 (16:22 IST)
Updated Date: Thu, 07 Aug 2008 (16:21 IST)
ஆஃப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க படைகளின் அமைதி, மேம்பாட்டு நடவடிக்கைகள் நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாகவும், இதனை மேலும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஹாரி ரீட் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஹாரி ரீட் வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 1,500 கி.மீ நீளம் கொண்ட ஆஃப்கான்-பாக். எல்லைப்பகுதியில், பரஸ்பரம் ஊடுருவ ஏராளமான வழிகள் உள்ளன என்பதால் அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமானதாக உள்ளதாக குறிப்பிட்டார்.
இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் ஆஃப்கான் எல்லைப்பகுதியில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டாலும், ஈராக் பிரச்சனையிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டதாக குறிப்பிட்ட அவர், ஆஃப்கான்-பாக். எல்லைப்பகுதியில் படைகளை பலப்படுத்த இதுவே சரியான தருணம் எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஆஃப்கானிஸ்தான் சென்ற அமெரிக்க நாடாளுமன்ற குழுவில் உறுப்பினர் ஹாரி ரீட் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.