Publish Date: Tue, 05 Aug 2008 (15:23 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:59 IST)
பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் மீது அதிகார துஷ்பிரயோக தீர்மானம் கொண்டு வருவதற்கு பதிலாக, அவர் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாகிஸ்தான் மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் அதிபர் பதவியில் இருந்து முஷாரஃப்பை கவுரவமான முறையில் வெளியேற்றுவதுடன், நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியுடனான கூட்டணியையும் பலப்படுத்திக் கொள்ள முடியும் என பாகிஸ்தான் மக்கள் கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்தாண்டு அவசர நிலை அமல்படுத்தப்பட்டிருந்த காலத்தில் முஷாரஃப் பதவி நீக்கம் செய்த நீதிபதிகள் அனைவரையும், புதிய அதிபர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்து மீண்டும் பதவியில் அமர்த்த முஷாரஃப் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு உதவும் என அந்நாட்டில் வெளியாகும் ‘தி டான்’ நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் முஷாரஃப் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரும் திட்டம் குறித்து, பி.பி.பி. துணைத்தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) தலைவர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த சந்திப்பின் போது விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.